ஹோட்டலில் சாராயம் குடிக்க அனுமதிக்காததால் உரிமையாளருக்கு பீர் பாட்டிலால் குத்து...
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் உணவகத்தில் சாராயம் குடிக்க அனுமதிக்காததால் உணவக உரிமையாளரை பீர் பாட்டிலால் குத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலர்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் பிரகாஷ் (24). இவர், அதே பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். திருவண்ணாமலையை அடுத்த ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஜய் (21), அஜித் (21).
சமீபத்தில் பிரகாஷின் உணவகத்திற்கு விஜய், அஜித் இருவரும் சேர்ந்து சென்றுள்ளனர். அங்கு இவர்கள் இருவரும் சேர்ந்து சாராயம் குடிக்க தயாரானார்கள். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உணவகத்திற்குள் சாராயம் குடிக்க கூடாது என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விஜய்யும், அஜித்தும் ஒன்றாக சேர்ந்து பிரகாஷை பீர் பாட்டிலால் வயிற்றில் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பிரகாஷ், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர், அவர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா காவலாளர்கள் வழக்குப் பதிந்து விஜய் மற்றும் அஜித்தை கைது செய்தனர்.