அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கல்லூரி வளாகங்களில் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மாணவி பாலியல் வன்கொடுமை
தமிழகத்தில் மட்டுமல்ல நாட்டிலையே மிகவும் பிரபலமான பல்கலைக்கழகமாக இருப்பது அண்ணா பல்கலைக்கழகம், இந்த பல்கலைக்கழகத்தில் படிப்பதே பெரும்பாலான மாணவர்களின் விருப்பமாக இருக்கும். அப்படிப்பட்ட கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 23ஆம் தேதி இரவு நேரத்தில் தனது காதலனோடு தனிமையில் பேசிக்கொண்டிருந்து மாணவியை மர்ம நபர் வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார். மேலும் மாணவியை தனியாக அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் காரணமாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
வெளியான எப்ஐஆர்
அவரது மொபைல் போனில் 50க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில் மாணவி கொடுத்த வாக்குமூலம் எப்ஐஆர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மாணவியின் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட குழு விசாரணை நடத்தும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கல்லூரி வளாகத்தில் கூட மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பதாக விமர்சிக்கப்பட்டது. அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டது. மேலும் சென்னை உயர் நீதிமன்றம், தேசிய மகளிர் ஆணையமும் மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான எப்ஐஆர் வெளியானதற்கு கண்டனம் தெரிவித்தது.
கல்லூரிகளுக்கு பறந்த உத்தரவு
இந்தநிலையில் அனைத்து கல்வி நிலையங்களுக்கு உயர் கல்வித்துறை செயலாளர் கோபால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், இனி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும்போது மாணவர்கள் அடையாள அட்டை அணிந்து இருப்பது கட்டாயம். கல்வி நிறுவனங்களுக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் வேலை நிமித்தமாக கல்லூரி வளாகத்திற்கு வரக்கூடிய எலக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள் உள்ளிட்டோரின் விவரங்களை தவறாமல் பதிவு செய்ய வேண்டும். பயோ மெட்ரிக் வருகை பதிவேடு கட்டாயமாக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த அனைத்தையும் பல்கலைக்கழகங்கள் மிகவும் கவனத்துடன் பாதுகாப்பு நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
