சிறுமிகள் இறந்தது எப்படி? விளக்கம் கொடுங்க..! உயர்நீதிமன்றம் அதிரடி..!
சென்னை கொடுங்கையூரில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து 2 சிறுமிகள் உயிரிழந்தது தொடர்பாக விளக்க அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
சென்னை கொடுங்கையூரில் ஆர்.ஆர்.நகர் பகுதியில் தரையில் அமைக்கப்பட்டிருந்த மின்பெட்டியில் இருந்து மின்கம்பிகள் அறுந்துவெளியே கிடந்தது. அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த பாவனா, யுவஸ்ரீ என்ற 2 சிறுமிகள், அந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.
மின்கம்பிகள் அபாயகரமாக தரையில் கிடப்பது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகளும் ஊழியர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினார். அந்த ஒரு மின்பெட்டி மட்டுமல்லாமல் கொடுங்கையூர் பகுதியில் பல இடங்களில் மின்பெட்டிகள் அதேபோல அபாயகரமான முறையில் தரையில் திறந்தபடியே இருந்தது. மேலும் மின் இணைப்புகளும் சாலைகளின் ஓரமாக மின்கம்பிகள் எடுத்து செல்லப்பட்டு கொடுக்கப்பட்டிருந்தன.
இரு சிறுமிகளின் இறப்பை தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், சிறுமிகளின் உயிரிழப்பு தொடர்பாக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.
சிறுமிகள் உயிரிழப்பைத் தொடர்ந்து, அலட்சியமாக செயல்பட்ட 3 மின்வாரிய அதிகாரிகள், 5 ஊழியர்கள் என மொத்தம் 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், சிறுமிகள் உயிரிழப்பு தொடர்பாக அரசு விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.