2021 சட்டமன்ற தேர்தலில் பொய் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த விவகாரத்தில் தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு.

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டார். தேர்தலின் போது வீரமணி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், தவறான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார்.

அதன் அடிப்படையில் திருப்பத்தூர் நடுவர் நீதிமன்றத்தை நாடிய தேர்தல் ஆணையம் வீரமணிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கில் தாம் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் கே.சி.வீரமணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர், வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில் பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டிருந்த தகவலில் இருந்து ரூ.14.30 கோடி வித்தியாசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேட்புமனுவில் தவறான தகவல்கள் தெரிவிகக்கப்பட்டதால் அது தொடர்பாக மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருப்பதாக உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் கே.சி.வீரமணியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.