தனியார் சட்ட கல்லூரிகள் அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு - தமிழக அரசின் சட்டத்துக்கு தடை
தனியார் சட்ட கல்லூரி அமைக்க தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதிய தனியார் கல்லூரிகள் அமைக்க உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக நீதிப்பேரவை தலைவர் பாலு தாக்கல் செய்துள்ள மனுவில், தற்போது 65 ஆயிரம் வக்கீல்கள் உள்ளனர். ஆண்டுக்கு 3,500 புதிய வக்கீல்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்து வருகின்றனர். இந்திய சட்ட கமிஷன் பரிந்துரையின்படி, நாட்டில் 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் வீதம் இருக்க வேண்டும்.
ஆனால், தற்போது 10 நீதிபதிகள் தான் உள்ளனர். எனவே, வக்கீல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், தமிழகத்தில் வெறும் 10 சட்டக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. கடந்த ஆண்டு சட்டக் கல்லூரியில் சேர விரும்பிய 6,036 பேருக்கு இடம் கிடைக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், தமிழக சட்டக் கல்லூரிகளில் இடம் கிடைக்காதவர்கள், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள சட்டக் கல்லூரியில் சேர்ந்து, தமிழகத்தில் வக்கீலாக பதிவு செய்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
அதன்பேரில், தனியார் சட்டக் கல்லூரி தொடங்க பல அமைப்புகள் விண்ணப்பம் செய்துள்ள நிலையில், தமிழக அரசு கடந்த ஜூலை 30ம் தேதி அதை தடுக்கும் விதமாக சட்டசபையில் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
தமிழ்நாடு தனியார் சட்டக் கல்லூரி தொடங்குவதற்கு தடை விதிக்கும் சட்டம் என்ற பெயரில் இயற்றப்பட்டுள்ள இந்த சட்டத்துக்கு கடந்த செப்டம்பர் 30ம் தேதி தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்து, அரசிதழில் வெளியிட்டுள்ளது. எனவே இதனை ரத்து செய்து தனியார் சட்டக்கல்லூரிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இதே போன்று வன்னியர் கல்வி அறக்கட்டை சார்பில் தனியார் சரஸ்வதி சட்டக்கல்லூரி தொடங்க அனுமதி கேட்டு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியும் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் ஆர்.மாகதேவன் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த போது இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தைருந்தார்.
இன்று இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது தமிழக அரசு 2014 ம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்வதாக உத்தரவிட்டார். மேலும் வன்னியர் அறக்கட்டளை சார்பில் சரஸ்வதி சட்டக்கல்லூரி தொடங்க அனுமதி கேட்டு 8 ஆண்டு காலம் கால தாமதம் செய்த தமிழக அரசுக்கு 20 ஆயிரம் அபராதமும் விதித்திக்கப்பட்டது.
அந்த அபாரத் தொகையை வன்னியர் அறக்கட்டளை வழங்க வேண்டும், மேலும் புதியதாக சட்டக்கல்லூரி தொடங்க முறையாக விண்ணப்பிக்கப்பட்டால் அவற்றை தமிழக அரசு பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது