Heavy sun burn from tommorrow agni Natchanthram
நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ளதால் வெயில் சுட்டெரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 28 ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும் என்பதால் வெயிலை நினைத்து பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
அக்னி நட்சத்திரம் நாளை தொடங்கி 28-ந் தேதி வரை சுட்டெரிக்க உள்ளது. அதே நேரத்தில் கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அனல்காற்றும் வீசியது. இரவு நேரங்களில் கூட வெப்பம் குறையாமல் இருந்தது.


இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கத்திரி வெயில் நாளைதொடங்கி 28-ந் தேதி வரை இருக்கும். அடுத்த 3 மாதத்துக்கு வழக்கத்தை விட 0.5 முதல் 1 டிகிரி வரை வெப்பம் அதிகம் பதிவாக வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காலக்கட்டத்தில் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் இருந்து அனல்காற்று வீச வாய்ப்பு இருக்கிறது. ஈரப்பதம் குறைந்து வறண்ட வானிலை காணப்படுவதால் தமிழகம், புதுச்சேரியில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்.
சென்னையை பொறுத்தவரை அனல் காற்று வீசுவதுடன் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டத்தில் காற்றின் திசையை பொறுத்து வெப்பநிலை மாறும்.

பரவலாக தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களில் 107 டிகிரி வரை வெயில் பதிவாக வாய்ப்பு உள்ளது. தற்போது கடல் பகுதியில் இருந்து நிலப்பகுதிக்குள் கடல் காற்று புகுவதால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாக இருக்கிறது.
ஆனால் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு நிலப்பரப்பில் வீசும் காற்று, கடல் காற்றை நிலப்பரப்புக்குள் புகாமல் தடுத்து விடும். இதனால் அனல் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
