தீவிர புயலாக மாறியுள்ள கஜா… இனி 90 கி.மீட்டர்தான் இருக்கு… இன்னும் சற்று நேரத்தில் பயங்கர காற்று வீசும்…
கஜா தீவிர புயலாக மாறியுள்ள நிலையில் நாகைக்கு தெற்கே இன்று இரவு 11 மணிக்கு மேல் கரையைக் கடக்கும் என்றும், தற்போது கஜா நாகையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவுக்கு நெருங்கி வந்துவிட்டது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு 10.30 மணிக்கு மேல் பயங்கர காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது .
இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என அவர் தெரிவித்தார்..