அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!
அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அக்.,12 இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள வளி மண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
வானிலை முன்னறிவிப்பைப் பொறுத்த வரை, அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும். டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்குப் பருவமழை முழுமையாக விலகவில்லை; மேலும் நான்கைந்து நாட்களில் படிப்படியாக விலகும். வடகிழக்குப் பருவமழைக்கு இன்னும் அறிகுறி தென்படவில்லை என்றார் பாலசந்திரன்.
தமிழகத்தைப் பொறுத்த அளவில், மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்ப் பகுதியை ஒட்டிய இடங்களில் தென்மேற்குப் பருவழை பரவலாகப் பெய்யும். மாநிலத்தின் உள்பகுதிகளில், வடகிழக்குப் பருவ மழை பெய்யும். அந்த வகையில், கடந்த புயல்களால் பாதிக்கப்பட்ட இடங்களில், இன்னும் இரு மாதங்களில் மழை பெய்யத் தொடங்கும். அப்போது, சென்னை போன்ற நகரங்களில் இந்த முறை நீர் பெருக்கெடுக்கும் என்று எச்சரிக்கப்பட்டூ வருகிறது. நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப் பட்டிருப்பதும், சரியான வடிகால் வசதிகள் செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதும், இத்தகைய நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.