heavy rain in Kanyakumari Rainwater flowing through roads ...
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் பரவலாக மழை பெய்ததால் சாலைகளி மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மின்னல் தாக்கியதில் சில வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன.
கன்னியாகுமரி அருகே மேலடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதாலும், மேலும் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றும் தமிழகம் வழியாக செல்வதாலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை கருமேகங்கள் தோன்றி 5 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசான தூறலாக தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல வேகம் எடுத்தது.
நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், பூதப்பாண்டி, தடிக்காரன்கோணம், துவரங்காடு, அருமநல்லூர், கடுக்கரை, மார்த்தாண்டம், அருமனை, குலசேகரம், களியல், கடையாலுமூடு, வெள்ளிச்சந்தை, களியக்காவிளை, சுவாமியார்மடம், திருவட்டார் உள்ளிட்ட இடங்களிலும் மழை பரவலாக பொழிந்தது.
மலையோர பகுதிகள் மற்றும் அணை பகுதிகளிலும் மழை கொட்டியதால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
நாகர்கோவிலில் செம்மாங்குடி ரோடு, கே.பி. ரோடு, கேப் ரோடு, மணிமேடை சந்திப்பு, ஆட்சியர் அலுவலக சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு, பீச்ரோடு உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர் அதிகளவில் ஓடியது. ஆனால், பெரும்பாலான சாலைகளில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்தோடியது.
இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்த னர். சில இடங்களில் கால்வாயில் மழைநீருடன் பாலித்தீன் பைகளும் இழுத்து வரப்பட்டன. மழை ஓய்ந்த பிறகு சாலைகளில் பாலித்தீன் பைகளாக காட்சியளித்தன.
காவல் கண்காணிப்பாளர் அலுவலக சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் இருப்பதால் அந்த சாலையில் சேறும், சகதியுமாக காட்சியளித்தது.
அதேபோன்று, குலசேகரம் பகுதியில் இடி - மின்னலுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் சில வீடுகளில் டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து எங்கும் குளுமை பரவியிருந்தது.
v
