தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை கொட்டும்.., எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!! | Tamilnadu Rain
#Tamilnadu Rain | தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தெற்கு ஆந்திர வட தமிழகத்தை ஒட்டிய கடற்கரை பகுதியில் நாளை நிலவக்கூடும் என்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்துள்ளதாக கூறிய அவர், அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தியில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று கூறிய அவர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுவையில் ஒருசில பகுதிகளில் மிக கனமழையும் கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழையும் பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்தார். நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் ஒரிரு இடங்களில் அதிகனமழையும் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழையும் பிற மாவட்டங்களில் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மத்திய மேற்கு, தென் மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திர வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சமயங்களில் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று முதல் 19 ஆம் தேதி வரை மத்திய மேற்கு, தென் மேற்கு, தெற்கு ஆந்திர மற்றும் வட கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக பாலச்சந்திரன் தெரிவித்தார். கடந்த 1 ஆம் தேதி முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுவையில் இயல்பான மழை அளவு 29 செ.மீ என்கிற நிலையில் பதிவான மழையின் அளவு 45 செ.மீ. இது 54 சதவீதம் இயல்பைவிட அதிகம் என்றும் சென்னையில் இயல்பான அளவு 49 செ.மீ . பதிவான மழையின் அளவு 81 செ.மீ. இது 65 சதவீதம் இயல்பை விட அதிகம் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கான வாய்ப்புள்ளதால் அந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.