கோவையில் கோடை அதிசயம்…… அசத்தியது ஆலங்கட்டி மழை !!
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இடி, மின்னல், சூறாவளி, கனமழை, ஆலங்கட்டி மழை என்ற கோவையில் இன்று நடந்த இந்த அதிசயத்தை பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.
தற்போது நிலவி வரும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில்பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கடும் வெயிலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மழையை அனைவரும் எதிர்பர்த்துக் காத்திருந்தனர்.
கோவையில், கோடை வெயில் வாட்டி வதைப்பதால், மக்கள் வெளியில் நடப்பதையே குறைந்துக் கொண்டனர். ஆனாலும் அவ்வப்போது மழை பெய்து கோவையை குளிர வைத்தது.
கடந்த வாரம் கோவை புறநகர் பகுதிகளான விளாங்குறிச்சி, ஹோப்ஸ் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. சுந்தராபுரம், தொண்டாமுத்துார், மருதமலை, சரவணம்பட்டி, கணுவாய், வடவள்ளி உள்ளிட்ட இடங்களில் ஒன்றரை மணி நேரம் இடைவிடாது மழை பெய்ததால் பூமி குளிர்ந்தது.
இந்நிலையில் கோவை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மதியம் முதல் வானத்தில் மேகம் சூழந்து காணப்பட்டது. இதையடுத்து மாலை பலத்த இடியுடன் கன மழை பெய்தது. மேலும் ஒரு சில இடங்களில் வேகமான காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பெய்தது. பொது மக்களும், சிறுவர்களும் ஆலங்கட்டிகளை கைகளில் எடுத்தும், ஒருவர் மீது ஒருவர் எறிந்தும் விளையாடி மகிழ்ந்தனர்.