5 மாவட்டங்களை அலறவிடப்போகுது கனமழை... வஞ்சனை இல்லாமல் வட தமிழகத்திலும் இடியுடன் கூடிய மழை!
கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் மற்றும் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து தமிழகத்தின் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கிறது. தொடர் மழையால் நீலகிரி, வால்பாறை, திண்டுக்கல், தேனியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
இதே போல தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தலைநகரான சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலையில் பலத்த மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. கடலில் அலைகள் 3.5 முதல் 4.5 மீட்டர் வரை அலைகள் எழும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.