பகுதிநேர நியாய விலைக் கடைகள் தொடக்கம் - அதிகாரிகளுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவுரை...
தருமபுரி
தருமபுரியில் புதிதாக பகுதிநேர நியாய விலைக் கடைகள் தொடங்குவது குறித்து மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் கூட்டுறவு துறை இணைப் பதிவாளர் சந்தானம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர் அமீர்துல்லா, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம்.காளிதாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதில், மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டார். அவர். அதிகாரிகளுடன் புதிதாக பகுதிநேர நியாய விலைக் கடைகள் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஏற்கெனவே, "நியாய விலைக் கடைகள் தேவை என்று மக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள், கூடுதல் எண்ணிக்கையில் குடும்ப அட்டைதாரர்களைக் கொண்ட கடைகள், அவற்றைப் பிரித்து புதிதாக பகுதிநேர நியாய விலைக் கடைகள் தொடங்கவுள்ள வாய்ப்புகள், அதிக தொலைவு சென்று பொருள்கள் வாங்கும் அளவுக்கு நியாய விலைக் கடைகள் உள்ள பகுதிகள்" போன்றவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
இறுதியில், தருமபுரியில் தேவையான புதிய பகுதி நேர நியாய விலைக் கடைகள் குறித்து விரைவில் அரசுக்கு பட்டியல் அனுப்ப வேண்டும் என்று அலுவலர்களுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவுரை வழங்கினார்.