கைது பீதியில் உயரதிகாரிகள்... வளைத்து தூக்க ஸ்கெட்ச் போடும் சிபிஐ!
குட்கா வழக்கில் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார், சிபிஐ அதிகாரிகளிடம் தன்னை சிக்கவைத்த உயர் போலீஸ் அதிகாரிகள் குறித்து உரிய ஆவணங்களுடன் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
குட்கா வழக்கில் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார், சிபிஐ அதிகாரிகளிடம் தன்னை சிக்கவைத்த உயர் போலீஸ் அதிகாரிகள் குறித்து உரிய ஆவணங்களுடன் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 5 உயர் போலீஸ் அதிகாரிகள் தொடர்புக்கான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை சிபிஐ கைப்பற்றியிருப்பதால் அவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தடையின்றி விற்பனை செய்ய அமைச்சர், டிஜிபி, முன்னாள் போலீஸ் கமிஷனர், மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் என பல முக்கிய அதிகாரிகள் குட்கா வியாபாரி மாதவராவிடம் ரூ.40 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து டிஜிபி. டிகே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பல ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர்
இந்த விவகாரம் தொடர்பாக குட்கா வியாபாரி மாதவராவ் உட்பட 6 பேர் அதிரடியாக கைது செய்தனர். அதைதொடர்ந்து லஞ்சம் பெற்றதாக கூறப்படும் செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவல் மற்றும் மாதவராவ் அளித்த வாக்குமூலத்தின் படி சிபிஐ அதிகாரிகள் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள ஜெயகுமார் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர்.
இதனையடுத்து கடந்த 2 நாட்களாக ஜெயக்குமார் நுங்கம்பாக்கத்தில் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். அப்போது குட்கா வழக்கில் தம்மை சிக்க வைத்த 5 உயர் போலீஸ் அதிகாரிகள் குறித்து ஜெயக்குமார் சிபிஐ அதிகாரிகளிடம் விளக்கமாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த போது மாதவராவ் குடோனில் சோதனைக்கு உத்தரவிட்ட உயர் போலீஸ் அதிகாரி யார்? குடோனில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் யாரிடம் கொடுக்கப்பட்டது? சிபிஐ அதிகாரிகளிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இதன் அடிப்படையில் குட்கா லஞ்ச விவகாரத்தில் தொடர்புடைய உயர் போலீஸ் அதிகாரிகளை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் உயரதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.