சூடுபிடிக்கும் குட்கா விவகாரம்... விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாருக்கு சம்மன்!
குட்கா முறைகேடு வழக்கில் விழுப்புரம் எஸ்.பி. ஜெயகுமாருக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.
குட்கா முறைகேடு வழக்கில் விழுப்புரம் எஸ்.பி. ஜெயகுமாருக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக, குடோன் உரிமையாளர் மாதராவ் கொடுத்த தகவலின் அடிப்படையில், சிபிஐ அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணன் ஆகியோர் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதனையடுத்து மாதராவ் உட்பட 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக பலருக்கு சம்மன் அனுப்பி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக ரகசியமாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் குட்கா ஊழல் நடந்த காலத்தில் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக பணியாற்றியவர் ஜெயக்குமார். இவர் தற்போது விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.,யாக இருந்து வருகிறார். குட்கா ஊழல் தொடர்பாக விசாரணையின் போது முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், ஜெயக்குமார் தன்னிடம் தகவல் தரவில்லை என கூறி இருந்தார். ஜெயக்குமார் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இந்நிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி எஸ்.பி., ஜெயக்குமாருக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.