Gundas Act on Thirumurugan....
அதிமுக பொது செயலாளர் சசிகலா, துணை பொது செயலாளர் தினகரன் ஆகியோர் சிறையில் இருக்கின்றனர். மறுபக்கம் ஆளும் எடப்பாடி அணிக்கும், பன்னீர் அணிக்கும் இடையே காரசார மோதல் நடைபெற்று வருகிறது.
அடுத்து, பிரதமர் மோடியின் செல்வாக்கை பெறுவதில் அதிமுகவின் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வருமானவரி துறை சோதனை, சேகர் ரெட்டி டைரி விவகாரம் போன்ற காரணங்களால், மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் எடப்பாடி, மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என்றும் அமைச்சர்களை அறிவுறுத்தி உள்ளார்.
இதனால், நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தியில் எழுதப்பட்டது தொடங்கி, நீட் தேர்வு, விவசாயிகள் போராட்டம், நெடுவாசல் போராட்டம், மாட்டிறைச்சி தடை என, எதிலுமே மத்திய அரசுக்கு எதிராக எந்த கருத்துக்களையும் உதிர்க்காமல் கவனமாக இருக்கிறார் எடப்பாடி.

இந்த நிலையில், தமிழக அரசு செயல்படாத அரசு என்று, திமுக செயல் தலைவர் உள்பட அனைத்து எதிர் கட்சிகளும், எடப்பாடி அரசை கடுமையாக சாடி வருகின்றன.
இந்த பிரச்சினையை திசை திருப்பும் வகையில், மே 17 இயக்கத்தின் சார்பில் கடந்த 21 ம் தேதி, இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளது தமிழக அரசு.
அவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம், நீதி மன்றத்தில் நிற்காது என்று தெரிந்தும், பிரச்சினைகளை திசை திருப்ப, தமிழக அரசு இவ்வாறு செய்துள்ளது என்று தமிழ் ஆர்வலர்களும், திரைப்பட துறையினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பற்றி எரியும் பிரச்சினையை திசை திருப்ப, ஒவ்வொரு அரசும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது வாடிக்கை என்று கூறும் தமிழ் ஆர்வலர்கள், அதற்கு பல உதாரணங்களையும் கூறுகின்றனர்.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, திருச்செந்தூர் முருகன் கோவில் வைர வேல் காணாமல் போனதால், நீதி கேட்டு நெடும் பயணம் அறிவித்தார் கருணாநிதி.
அதை திசை திருப்ப, தமிழ்நாட்டின் தலை நகரை சென்னையில் இருந்து திருச்சிக்கு மாற்றலாம் என்று ஒரு தகவல் வெளிப்பட்டதால், திருச்செந்தூர் விவகாரம் முடிவுக்கு வந்து விட்டது.
2009 ம் ஆண்டு ஈழ பிரச்சினை பெரிதாக வெடித்தபோது, மருத்துவமனையில் இருந்த கருணாநிதி, வைகோ வை கைது செய்யுமாறு அதிகாரிகளிடம் கூறினார்.

எந்த செல்வாக்கும் இல்லாத அவரை இந்த நேரத்தில் எதற்கு கைது செய்யவேண்டும் என்று, அதிகாரிகள் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
ஆனால் அடுத்த சில நாட்களில் முத்துக்குமார் தீ குளித்த போதுதான், கருணாநிதியின் யோசனையை அதிகாரிகள் உணர்ந்தனர்.
அதேபோல், காந்தியவாதி சசிபெருமாள் மரணத்தின்போது வெடித்த சர்ச்சையை, பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு, அனிருத் மூலமாக திசை திருப்பினார் ஜெயலலிதா.

அந்த வகையில்தான், செயல்படாத அரசு என்ற விமர்சனத்தை திசை திருப்ப, தேவையே இல்லாமல், திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து, பிரச்சினையை எடப்பாடி அரசு திசை திருப்பி இருக்கிறது என்று தமிழ் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
