இது இல்லைனா மதுபானம் கொடுக்காதீங்க... டாஸ்மாக் கடைகளுக்கான கட்டுப்பாடுகளை வெளியிட்டது தமிழக அரசு!!
முக கவசம் அணிந்து வரும் நுகர்வோருக்கு மட்டுமே மதுபானங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட டாஸ்மாக் கடைகளில் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
முக கவசம் அணிந்து வரும் நுகர்வோருக்கு மட்டுமே மதுபானங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட டாஸ்மாக் கடைகளில் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,000ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 20 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர். இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் தமிழகத்தில் ஒமைக்ரான் எனும் உருமாறிய கொரோனாவைரஸ் பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பும் ஒமைக்ரான் பாதிப்பும் வேகமாக பரவும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு துரிதப்படுத்தியுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் ஜனவரி 31 ஆம் தேதி வரை இரவுநேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று 2வது முறையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதேபோல் ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. பேருந்துகளில் 75% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
அதே நேரத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கான கட்டுப்பாடுகள் இதுவரை அறிவிக்கப்படாதது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டாஸ்மாக் மதுக் கடைகளில் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுக்குறித்த சுற்றறிக்கையில், மதுபான சில்லறை விற்பனை கடைகளில் கூட்டமாக நிற்க அனுமதிக்க கூடாது. வாடிக்கையாளர்கள் இடையே 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. மதுபான சில்லறை விற்பனை கடை பணியாளர்கள் முக கவசம், கையுறை அணிவது அவசியம். கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். முக கவசம் அணிந்து வரும் நுகர்வோருக்கு மட்டுமே மதுவகைகள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.