முழு ஊரடங்கின் போது காவல் துறையினர் பின்பற்ற வேண்டிய குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கின் போது காவல் துறையினர் பின்பற்ற வேண்டிய குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை அடுத்து தமிழகத்தில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டதோடு இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் விதிக்கப்பட்டது. இதை அடுத்து தமிழகத்தில் நேற்றைய தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த நிலையில் மாநிலம் முழுவதும் 06.01.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 05.00 மணி வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் அதோடு 09.01.2022 ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இதற்கிடையே காவல்துறையினருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மத்திய மற்றும் மாநில அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், நீதிமன்றம் மற்றும் நீதிந்துறை தொடர்பான பணிகளில் ஈடுபடுவோர். உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிவோர், வங்கி பொதுப் போக்குவரத்து, உள்ளிட்டவர்கள் அலுவலுக்காக பயணம் மேற்கொள்ள அடையாள அட்டையை பார்வையிட்டு அனுமதிக்க வேண்டும்.

அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம் மின்சாரம், தகவல் தொடர்பு, தினசரி பத்திரிக்கை விநியோகம், மருந்துகள் மற்றும் மருத்துவம் சார்ந்த அனைத்து சேவைகள், ATM மையங்கள், சரக்கு மற்றும் எரிபொருள் வாகனங்களில் பணிபுரிவோர் அடையாள அட்டையை பார்வையிட்டு அனுமதிக்க வேண்டும். சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்படும் விவசாய விலைபொருட்கள், காய்கறி, பழங்கள், கறிகோழிகள், முட்டை போன்ற வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்யக்கூடாது. மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் சரக்கு வாகனங்களுக்கும் இது பொருந்தும். உற்பத்தி தொழிற்சாசலகள், தகவல் தொழில் நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனப்பணியாளர்கள் அடையாள அட்டை காண்பித்து பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். 09.01.2022 அன்று முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளபோது உணவகங்களில் பார்சல் சேவைகள் மட்டும் காலை 07.00 முதல் இரவு 10.00 வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின்வணிக நிறுவனப் பணியாளர்களை மேற்குறிப்பிட்ட நேரங்களில் செயல்பட அனுமதிக்க வேண்டும். ஒன்றிய மற்றும் மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையம், நிறுவனங்களின் நுழைவுத்தேர்வு மற்றும் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளுக்கு செல்வோர் அழைப்பு கடிதத்தை காட்டினால் அனுமதிக்க வேண்டும். 09.01.2022 அன்று ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வணையம் நடத்தும் குடிமைப்பணிகளுக்கான தேர்வுகள் நடக்கவுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

விமானம், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்லும் பயணிகளையும், விமானம், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து வீடுகளுக்கு செல்லும் பயணிகளையும் அனுமதிக்க வேண்டும். சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. கிராமப்புறப் பகுதிகளில் விவசாயிகள், விவசாயப் பணிக்காக செல்பவர்களை அனுமதிக்க வேண்டும். அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வோர், பணிமுடிந்து சொந்த ஊருக்கு திரும்புவோரை பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். வாகனச் சோதனையின் போது வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். வாகனத்தை சோதனை செய்ய வேண்டியிருந்தால் கையுறை அணிந்திருக்க வேண்டும். அடிக்கடி கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இரவு வாகனச் சோதனை வெளிச்சம் உள்ள இடங்களில் நடத்த வேண்டும். காவலர்கள் தடுப்பாண்கள் அமைத்து ஒளிரும் மேற்சட்டை அணிந்து பாதுகாப்பாக இரவு நேரங்களில் பணியாற்ற வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
