திருப்பூரில் மது அருந்த பணம் தராத 80 வயது பாட்டியை அவரது பேரன் அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார். மது குடிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறியதால் ஆத்திரமடைந்த பேரன், பாட்டியின் தலையை துண்டித்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளான். 

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடத்தை அடுத்துள்ள பெரியகுமாரபாளையம் சேர்ந்தவர் பச்சையப்பன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மனைவி மயிலாத்தாள் (80). இவரது மகன் வழி பேரனான விஜயகுமார் (40) ஆகியோர் தனியாக வசித்து வந்தனர். விஜயகுமார் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவதும், பின்னர் வீட்டில் இருப்பவர்களிடம் தகராறில் ஈடுபடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இதை அவரது பாட்டி மயிலாத்தாள் கண்டித்துள்ளார். மது குடிக்காமல் ஒழுக்கமாக வீட்டிற்கு வருமாறு பலமுறை அறிவுரை கூறினார். ஆனால் பாட்டியின் அறிவுரையை கொஞ்சம் கூட விஜயகுமார் கேட்கவில்லை.

இந்நிலையில் மயிலாத்தாள் வீட்டில் உள்ள கட்டிலில் படுத்து கொண்டிருந்தார். அப்போது வந்த இரவு 7 மணியளவில் விஜயகுமார் மது போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது மயிலாத்தாளிடம் செலவுக்கு பணம் தருமாறு, விஜயகுமார் கேட்டுள்ளார். ஆனால் மயிலாத்தாள் பணம் இல்லை என்று கூறிவிட்டார். மேலும் பேரனை திட்டியதோடு, இதுபோல் மது குடித்து விட்டு, இங்கு வரக்கூடாது எனவும் மீண்டும் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் நேராக வீட்டுக்குள் சென்றார். அங்கு இருந்த அரிவாளை எடுத்து வந்து, ஆடு அறுப்பது போல் மயிலாத்தாள் தலையை மட்டும் தனியாக அறுத்து துண்டித்தார். இதனால் ரத்த வெள்ளத்தில் மூதாட்டி துடிதுடித்து உயிரிழந்தார். கொலையான மயிலாத்தாளின் உடல் கட்டிலிலும், தலை தரையிலும் கிடந்தது. பின்னர் விஜயகுமார் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக குண்டடம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாட்டியின் தலையை கொடூரமாக துண்டித்து தலைமறைவாக இருந்த விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுகுடிக்காதே என்று அறிவுரை கூறிய மூதாட்டியின் கழுத்தை அறுத்து பேரன் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.