அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் : 5 பேர் பரிதாப பலி
விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர் திசையில் வந்த இன்னொரு பேருந்துடன் மோதியதில் 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு அரசு போக்குவரத்துகழக பேருந்து ஒன்று இன்று காலை புறப்பட்டு சென்றது. விழுப்புரம் நோக்கி செல்லும் பேருந்து விக்கிரவாண்டி அருகே உள்ள முண்டியம்பாக்கம் வழுதாவூர் கூட்டு ரோடு அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சேலத்திலிருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. வழுதாவூர் கூட்டு ரோடு அருகே வரும்போது அங்குள்ள பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து பயணிகளை ஏற்றி கிளம்ப தயாரானது இதை கவனிக்காமல் வேகமாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிய பயணிகள் பேருந்து மீது மோதாமல் வலது புறம் திருப்ப பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பின் மீது மோதி அடுத்த சாலையில் பாய்ந்தது.
அப்போது எதிர் சாலையில் சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி சென்ற பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில், அந்த பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து சாலையில் விழுந்தது. பேருந்து முற்றிலுமாக விழுந்து நொறுங்கியது.
இதில் முன்று ஆண்கள் ஒரு குழந்தை உட்பட ஐந்து பயணிகள் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகே உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.