டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசுப் பணி - பாட்டாளி தொழிற்சங்கம் வலியுறுத்தல்...
ஈரோடு
மதுவிலக்கை அமல்படுத்தும்போது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்று அரசுப்பணி வழங்க வேண்டும் என்று பாட்டாளி தொழிற்சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு சங்கத் தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சேகர், சுப்பிரமணி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுதாகர் வரவேற்றுப் பேசினார்.
பாட்டாளித் தொழிற்சங்கப் பேரவை மாநிலப் பொதுச்செயலாளர் ராமமுத்துகுமார் பங்கேற்றுப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், "டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரை மேற்பார்வையாளர்களுக்கு ரூ.30 ஆயிரமும், விற்பனையாளர்களுக்கு ரூ.25 ஆயிரமும், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.20 ஆயிரமும் மாத சம்பளம் கொடுக்க வேண்டும்.
மதுவிலக்கை அமல்படுத்தும்போது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்று அரசுப்பணி வழங்க வேண்டும்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கப்படும் தற்போதைய மருத்துவ திட்டத்தை கைவிட்டு இ.எஸ்.ஐ. திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
டாஸ்மாக் ஊழியர்களை தாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடைமுறையில் உள்ள வார விடுமுறை வழங்கும் திட்டத்தை ஈரோடு மாவட்டத்தில் அமல்படுத்த வேண்டும்" போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் பா.ம.க. துணை பொதுச் செயலாளர்கள் பொ.வை.ஆறுமுகம், வேலுச்சாமி, பேரவையின் மாநில துணைச் செயலாளர் இராமசுந்தரன், பா.ம.க. மாநில துணைத் தலைவர் பரமசிவம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம், மாவட்ட செயலாளர்கள் கோபால், கிருபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.