தமிழ்நாடு அரசு ஊழியர்களின் காலவரையற்ற போராட்டத்தால் அரசுப் பணிகள் பெருமளவில் முடக்கம்…
தஞ்சாவூர்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசுப் பணிகள் பெருமளவில் முடங்கியுள்ளன.
தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.
இந்தப் போராட்டத்தில் நேற்று “வருவாய்த்துறை, கருவூலத் துறை, ஊரக வளர்ச்சி துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் பெற்றுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,
ஊதியக் குழுவில் 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்,
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தினர்.
இந்தப் போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் வெறுமையாக காணப்பட்டன. இதனால், அரசுப் பணிகள் பெருமளவில் முடங்கியது.
இந்தப் போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க வட்டத்தலைவர் கே.சின்னையன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் டி.முருகேசன், சாலை பணியாளர் சங்கம் ஏ.அமிர்தராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு ஊழியர் சங்க வட்டச்செயலாளர் கோ.கௌதமன், வருவாய் கிராம உதவியாளர் சங்கம் மாவட்ட செயலாளர் கே.சந்திரசேகரன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜெகதீசன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
சத்துணவு ஊழியர் சங்கம் டி.முருகையன், ஜெ.வீரமணி ஊரக வளர்ச்சித் துறை எஸ்.நேரு, சாலை ஆய்வாளர் ஆர்.அறிவழகன், அங்கன்வாடி ஊழியர் சங்கம் பரமேஸ்வரி, விக்டோரியா, ஜெயந்தி உள்பட பலரும் கலந்து கொண்டு பேசினர்.
அரசு ஊழியர் சங்க வட்ட பொருளாளர் ஆர்.முத்துகிருஷ்ணன் நன்றித் தெரிவித்தார்.