டேங்கர் லாரி மீது அரசு சொகுசு பேருந்து மோதல்.. எதிரில் பைக்கில் வந்தவர்கள் உள்ளிட்ட 4 பேர் பலி..!
பேருந்து சீர்காழி புறவழிச் சாலை பாதரக்குடி என்ற இடத்தில் சென்ற போது இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க அரசு சொகுசு பேருந்தை ஓட்டுநர் சாலையின் இடது புறமாக திருப்ப முயன்றார்.
சீர்காழி அருகே டேங்கர் லாரி மற்றும் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரசு பேருந்து நடத்துனர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்னை நோக்கி அரசு சொகுசு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து சீர்காழி புறவழிச் சாலை பாதரக்குடி என்ற இடத்தில் சென்ற போது இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க அரசு சொகுசு பேருந்தை ஓட்டுநர் சாலையின் இடது புறமாக திருப்ப முயன்றார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் பழுதாகி நின்றுக்கொண்டிருந்த குரூடு ஆயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி மற்றும் எதிரில் வந்த இருசக்கர வாகனத்தின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பத்மநாபன், அவரது மகன் அருள்ராஜ் மற்றும் பாலமுருகன் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதேபோல், நடத்துனர் விஜயசாரதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பேருந்தில் பயணம் செய்த பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் படுகாயமடைந்த 11 பேர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டேங்கர் லாரியில் இருந்து குரூடு ஆயில் கசிந்து வருவதால் பாதுகாப்பு கருதி அங்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.