அரசு ஊழியர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம்; கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வலியுறுத்தல்...
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பனகல் கட்டிடம் முன்பு தஞ்சாவூர் மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் ரெங்கசாமி, மாநில மகளிரணி குழு உறுப்பினர் செல்வி, தமிழ்நாடு கோவில் நிர்வாக அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் சம்பத்குமார், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், கோதண்டபாணி உள்பட பலர் பங்கேற்றுப் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "திருச்சியில் பெண் அலுவலக உதவியாளருக்கு சூடு வைத்த நீதிபதியின் தாயார் மீதும், நீதிபதியின் மீதும் மனித உரிமை மீறல் வழக்கும், குற்ற வழக்கும் தொடர வேண்டும்,
அலுவலக உதவியாளர்களை அலுவலக வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர்.