திருவண்ணாமலை ஆட்சியரை கண்டித்து வேலூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...
வேலூர்
அரசு அலுவலர்களை கடும் சொற்களால் திட்டிய திருவண்ணாமலை ஆட்சியரை கண்டித்து வேலூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, அரசு ஊழியர்களை கடுஞ்சொற்களைப் பயன்படுத்தித் திட்டியதாகவும், ஒருமையில் பேசியதாகவும் புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் கடந்த 2-ஆம் தேதி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆர்ப்பாட்ட பகுதிக்கு ஆட்சியர் நேரில் வந்தார். ஊழியர்கள், ஆட்சியரை கண்டித்து பேசுவதை அவரே கூட்டத்தில் ஒருவராய் நின்று வேடிக்கை பார்த்தார். பின்னர், அவர், தனக்கு பேச அனுமதி வழங்குமாறு வேண்டினார்.
அதன்படி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இது ஜனநாயக நாடு அனைவருக்கும் பேச்சுரிமை உண்டு என்று ஆட்சியருக்கு அனுமதி அளித்தனர்.
கூட்டத்தில் பேசிய ஆட்சியர் தன் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துரைத்தார். இருந்தும், ஆட்சியர் மீது வைக்கப்பட்ட புகார்கள் அவரின் பேச்சை எடுபடாமல் செய்தன.
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், போராட்டத்தில் ஈடுபட்ட அம்மாவட்ட அரசு ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் அரசு ஊழியர் சங்கம் சார்பில் வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு திருவண்ணாமலை ஆட்சியருகு எதிரான தங்களது முழக்கங்களை எழுப்பினர்.
வேலூரில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.