நஷ்டஈடு வழங்காமல் இழுத்தடித்து வந்ததால் அரசுப் பேருந்து பறிமுதல் – நீதிமன்றம் தடாலடி உத்தரவு…
நாமக்கல்
விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காமல் அரசுப் போக்குவரத்து கழகம் இழுத்தடித்து வந்ததால் அரசு பேருந்து ஒன்று நீதிமன்ற உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் தட்டாரத்தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (41). இவர் நாமக்கல்லில் இருசக்கர வாகன உதிரிபாகம் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.
இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி நாமக்கல்லில் உள்ள சேலம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த சேலம் கோட்டத்திற்குச் சொந்தமான அரசு பேருந்து ஒன்று இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது குடும்பத்தினர் நஷ்டஈடு வழங்கக்கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் அரசு போக்குவரத்து கழகம் இறந்துபோன ரவிச்சந்திரன் குடும்பத்திற்கு ரூ.6 இலட்சத்து 30 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நீதியமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நஷ்டஈடு வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.
எனவே, ரவிச்சந்திரன் குடும்பத்தினர் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தற்போதைய நீதிபதி இளவழகன் சேலம் கோட்டத்திற்குச் சொந்தமான அரசு பேருந்து ஒன்றை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று நீதிமன்றம் அமீனா முன்னிலையில் கரூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து நாமக்கல்லில் பறிமுதல் செய்யப்பட்டது.