உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நல்ல மழை; குளிர் குறைந்து இதமான சூழ்நிலையால் மக்கள் மகிழ்ச்சி...
நீலகிரி
உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நல்ல மழை பெய்து வருவதால் குளிர் குறைந்து இதமான சூழ்நிலை நிலவியது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை பருவம் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் தற்போது நாள்தோறும் தூறல் மழை பெய்து வருகிறது. இதனால், நகரிலுள்ள பூங்காக்கள் பொலிவு பெற்றுள்ளன. புல்வெளிகளும் பசுமையாகக் காட்சி அளிக்கின்றன.
கோடை பருவ நிலைக்காக மலர்ப் பாத்திகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர்ச் செடிகளுக்கு மழை ஏதுவானதாக அமைந்துள்ளதால் பூங்காக்களை பராமரிப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூறல் மழையின் காரணமாக நகரில் நிலவி வந்த குளிரும் குறைந்து இதமான காலநிலை நிலவுகிறது. குடிநீர்ப் பிரச்சனைக்கும் ஓரளவு தீர்வு ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு:
உதகையில் அதிகபட்சமாக 13.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
கெத்தை மற்றும் குந்தாவில் தலா 12 மி.மீ., கேத்தியில் 4 மி.மீ., குன்னூரில் 2 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.