gold seized in trichy airport
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.6 கிலோ (1.600 கி.கி.) தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக குடியுரிமைத் துறை அதிகாரி ஒருவரிடம், வான் நுண்ணறிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் இன்று அதிகாலை மலேசியாவில் இருந்து, ஏர் ஏசியா விமானம் வந்திறங்கியது. பின்னர், விமான பயணிகளிடம் வழக்கமான சோதனையை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
அப்போது பயணி ஒருவர் தனது உடைமைகளில் 1.6 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பயணிகளை சோதனையில் ஈடுபட்டிருந்த குடியுரிமைத்துறை அதிகாரி பாலாஜி பாஸ்கர் என்பவர் அந்த தங்கத்தை வாங்கி தனது பேண்ட் பையில் வைத்துக் கொண்டார்.
அதிகாரியின் இச்செயலை கண்காணிப்பு கேமரா வழியாக கண்டுபிடித்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் உடனடியாக அந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அதிகாரி பாலாஜி பாஸ்கரிடம், அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற கடத்தல் தங்கத்தை, அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு வந்து கொடுத்துவிட்டு, அதற்கு கமிஷன் பெறும் நோக்கத்தோடு செயல்பட்டதாக கூறப்படுகிறது.
கடத்தலை தடுக்க வேண்டிய அதிகாரியே, இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு, மேலதிகாரிகளிடம் சிக்கியது, திருச்சி விமான நிலைய அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
