திருச்சி விமான நிலையத்தில் 1.5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்.... ஒருவர் கைது...
மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 1.5 கிலோ தங்க கட்டிகள் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலேசியாவில் இருந்து திருச்சி வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து நேற்று இரவு 11.45 மணியளவில் மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளை அவர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியைச் சேர்ந்த மதுவன்ராஜா என்பவரின் உடைமைகளை சோதனை செய்தனர். மதுவன்ராஜா, டார்ச் லைட்டுகள் கொண்டு வந்துள்ளார். அதனை சுங்கத்துறை அதிகாரிகள் சோதித்துப் பார்த்துள்ளனர். அப்போது, டார்ச் லைட்டில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஒன்றரை கிலோவுக்கும் அதிகமாக தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மதுவன்ராஜா கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய மதிப்புபடி சுமார் 45 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.