தடுப்பணை கட்டும் திட்டத்தை கைவிடுங்கள் - கேரளா, கர்நாடகா, ஆந்திர அரசுக்கு ஒ.பி.எஸ் கண்டனம்...
அண்டை மாநிலங்களின் தடுப்பணை கட்டும் திட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு உள்ளதால் திட்டத்தை கைவிட மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கேரளா, கர்னாடகா, ஆந்திர மாநிலங்கள் தமிழகத்திற்கு வரும் நீரை தடுத்து நிறுத்தும் வகையில் தடுப்பணைகளை கட்ட தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து தமிழக முன்னாள் முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
கர்நாடக அரசு ஓகேனக்கல் அருகே தடுப்பணை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ஆந்திர அரசும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சி செய்கிறது.
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டும் பணியைத் தொடங்கிவிட்டது.
அண்டை மாநிலங்களின் இந்த நடவடிக்கையால் தமிழகத்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன.
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய நான்கு மாவட்டங்களின் குடிநீர் தேவை பெரிதும் பாதிப்புக்குள்ளாகும்.
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தேக்குவட்டை தடுப்பணையைக் கட்டி முடித்துவிட்டு, மஞ்சக்கண்டியில் அடுத்த அணை கட்டும் பணியைத் தொடங்கியிருக்கிறது.
காவிரியின் துணை நதியான பவானி ஆற்றின் குறுக்கே மொத்தம் 6 தடுப்பணைகளைக் கட்ட கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை விஸ்ரூபம் எடுக்கக்கூடும்.
எனவே, தமிழக மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் தடையின்றி கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்.
கேரள, கர்நாடக மற்றும் ஆந்திர அரசுகள், தங்கள் தடுப்பணை கட்டும் திட்டங்களை உடனடியாக கைவிட மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில், ஒ.பி.எஸ் கூறியுள்ளார்.