4-வது மாடியிலிருந்து குதித்த பள்ளி மாணவிகள்..! ஒரு மாணவி பரிதாப பலி.. சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்..!
சேலத்தில் பள்ளி மாணவிகள் 2 பேர் 4வது மாடியிலிருந்து குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு மாணவி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மற்றொரு மாணவிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்துவந்த மாணவிகள் கவிஸ்ரீ மற்றும் ஜெயராணி. நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவிகள் இருவரும் மாலை வீடு திரும்பவில்லை. அதனால் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். உடனடியாக பள்ளிக்கு சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் மாணவிகள் அங்கு இல்லாததை அடுத்து மாணவிகளை போலீசார் தொடர்ந்து தேடிவந்தனர்.
இந்நிலையில், இன்று காலை சேலம் 2வது அக்ரஹாரா தெருவில் உள்ள ஒரு பூட்டப்பட்ட கட்டிடத்தின் மொட்டை மாடியிலிருந்து கவிஸ்ரீ, ஜெயராணி ஆகிய 2 மாணவிகளும் கீழே குதித்தனர். அதில், ஜெயராணி என்ற மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவிஸ்ரீ உயிருக்குப் போராடிய நிலையில், இதைக் கண்ட அந்த பகுதிவாசிகள் கவிஸ்ரீயை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
நெருங்கிய தோழிகளான கவிஸ்ரீ மற்றும் ஜெயராணி ஆகியோர் வகுப்பில் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததால், இருவரையும் ஆசிரியர் பிரித்து உட்கார வைத்ததாகவும் அதனால் மாணவிகள் மனமுடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், தற்கொலை செய்ய முயன்றதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போலீசாரின் விசாரணைக்குப் பின்னரே மாணவிகளின் தற்கொலை முடிவுக்குக் காரணம் என்ன என்பது குறித்த உண்மைத்தகவல் தெரியவரும்.