பிஞ்சு குழந்தையை பேருந்து நிறுத்தத்தில் போட்டு சென்ற அவலம்; பெண் என்பதால் இந்த கொடூரமா?
தூத்துக்குடி
தூத்துக்குடியில் பேருந்து நிறுத்தத்தில் போட்டுவிட்டு சென்ற பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை பச்சிளம் குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ளது வில்லிசேரி பேருந்து நிறுத்தம். இங்கு கடந்த 22–ஆம் தேதி காலையில் பிஞ்சு பெண் குழந்தையை துணியில் போர்த்தி மர்ம நபர் ஒருவர் போட்டு சென்றுள்ளார்.
அந்தக் குழந்தையை மீட்ட அப்பகுதியினர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், காவலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த கயத்தாறு காவலாளர்கள் இதுகுறித்து வழக்குப்பதிந்தனர்.
அதன் பின்னர் இந்த பிஞ்சு குழந்தையின் பெற்றோர் யார்? அந்த குழந்தையை பேருந்து நிறுத்தத்தில் போட்டு சென்றவர் மர்ம நபர் யார்? பெண் குழந்தை என்பதால் போட்டு சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று தீவிர விசாரணையில் இறங்கினர்.
இந்த நிலையில், அந்தக் குழந்தையை மாவட்ட சமூக பாதுகாப்பு துறை சார்பில், திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய காப்பகத்தில் ஒப்படைத்து பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார், குழந்தைகள் நல அலுவலர் ஜேம்ஸ் ஆகியோரிடம் கோவில்பட்டி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கமலவாசன், நிலைய மருத்துவர் பூவேசுவரி, குழந்தைகள் நல மருத்துவர் ஜெயந்தி ராணி ஆகியோர் அந்த குழந்தையை ஒப்படைத்தனர்.
தற்போது திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய காப்பகத்திற்கு அந்த குழந்தையை கொண்டுச்சென்று பராமரித்து வருகின்றனர்.