வரி வாங்குறீங்களே, அடிப்படை வசதிகளை செய்வதற்கு என்னவாம்? பெண்கள் மறியல் போராட்டம்...
விருதுநகர்
அடிப்படை வசதிகளை செய்து தர கோரி விருதுநகரில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகரசபை 9-வது வார்டு கணேஷ் நகர், நேரு நகர், நேதாஜி தெரு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் பகுதிகளுக்கு நகராட்சியிலிருந்து சாலை வசதி, வாருகால் வசதி, குடிதண்ணீர் வசதி, குப்பைத் தொட்டி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் சினம் அடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று திருச்சுழி சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், "நாங்கள் இந்தப் பகுதிக்கு குடிபெயர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாகிறது. இவை அனைத்தும் விரிவாக்க பகுதி என்பதால் நகராட்சி எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை.
இது பற்றி பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் பலனில்லை. நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குப்பை வரிகளை மட்டும் கண்டிப்புடன் வசூல் செய்கின்றனர். ஆனால் அடிப்படை வசதிகள் மட்டும் செய்ய முன்வரவில்லை" என்றனர்.
இந்தப் போராட்டம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த நகர காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டியன், நகராட்சி உதவி பொறியாளர் காளஸ்வரி, சுகாதார ஆய்வாளர் சரவணன் ஆகியோர் அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எம்ன்று உறுதியளித்தனர்.
அதனையேற்று சாலை மறியலை கைவிட்டு பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.