ஈரோடு,
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்றுக் கோரி தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு மாவட்ட தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நசியனூரில் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.பெரியசாமி தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில், “மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து உள்ளதால் மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிப்பு அடைந்து உள்ளனர். இதனால் மஞ்சள் மார்க்கெட்டில் வியாபாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
கால்நடை விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது. கூட்டுறவு சங்க வங்கிகள் மூடப்பட்டு உள்ளன. விவசாயிகளின் வரவு செலவுகள் முடங்கி கிடக்கிறது. தேங்காய் கொப்பரை வியாபாரம், காய்கறி வியாபாரம் முடங்கியிருக்கிறது.
கிராமப்புறத்தில் உள்ள சிறு விவசாயிகள் குடும்ப செலவுக்கும், அவசர மருத்துவ செலவுகளுக்கும் கூட பணம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான இந்த வறட்சி காலத்தில் இத்தகைய பாதிப்புகளை இந்த சட்டம் ஏற்படுத்தி வருகிறது.
எனவே மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளுக்கு தேவையான நிதி ஆதாரங்களை மத்திய அரசு ரிசர்வ் வங்கி மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுவதால் விவசாயிகள் தேசிய வங்கிகளில் பெற்ற கடனுக்காக கட்டாய வசூல் செய்வதை கண்டிப்பது.
மேலும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் இரத்து செய்ய வேண்டும்” போன்ற தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் விவசாயிகள் ஆர்.ரங்கசாமி, நல்லமுத்து, சுப்பு, என்.எஸ்.ஈஸ்வரன், திருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
