உடனடி போதை தரும் ஊமைத்தங்காய் சாராயம்; போட்டிப் போட்டு விற்ற நால்வர் அதிரடி கைது...
கோயம்புத்தூரில், உடனடி போதை தரும் சாராயம் என்று விளம்பரப்படுத்தி ஊமைத்தங்காய் சாராயத்தை நான்கு பேர் போட்டிப் போட்டு விற்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளத்தனமாக சாராயம் விற்பனை நடைபெறுகிறது என்ற தகவல் காவல்துறைக்கு கிடைத்தது. அதன்படி, சூலூர் காவல் உதவி ஆய்வாளர் லெனின் தலைமையில் காவலாளர்கள் தொடர் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சூலூர் பி.என்.பி நகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள், அங்கு நின்றுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இதில் சந்தேகமடைந்த காவலாளர்கள் அவரை சோதனையிட்டனர்.
அப்போது அவரிடமிருந்து 15 சாராய பாட்டில்களை வைத்திருந்தது தெரிந்தது. சிக்கிக் கொண்ட அந்த இளைஞர் காடம்பாடியைச் சேர்ந்த இராமசாமி மகன் தாமோதரன் என்பதும் மாற்றுத் திறனாளியான இவர் திருட்டுத்தனமாக சாராயம் விற்று வந்ததும் காவலாளர்களுக்கு தெரிந்தது.
அதுமட்டுமின்றி, தான் விற்கும் சாராயத்தில் சீக்கிரத்தில் போதை ஏறவேண்டும் என்பதற்காக அதில் அரைத்த ஊமத்தங்காயை கலந்து விற்பனை செய்துள்ளார். இதனைக் கேட்ட காவலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தாமோதரனை காவலாளர்கள் கைது செய்தனர்.
"உடனடி போதை தரும் சாராயம் தன்னிடம் தான் இருக்கிறது" என்று விளம்பரப்படுத்தி சாராய விற்பனையில் ஈடுபட்ட செங்கத்துறை பகுதியை சேர்ந்த கிட்டப்பன் மகன் பழனிச்சாமி, காங்கேயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சடையப்பன் மகன் பெரியசாமி, காடம்பாடி பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் மணி ஆகிய மூவரையும் காவலாளர்கள் கைது செய்தனர்.
நால்வரையும் சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை நீதிபதி வேடியப்பன் விசாரித்தார். பின்னர் அவர், தாமோதரன் மாற்றுத் திறனாளி என்பதால் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்துவிட்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
மற்ற மூவரையும் 10 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி, அம்மூவரும் கோயம்புத்தூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.