gas tanker lorry strike from today
கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் டெண்டர் முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.
தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சொந்தமான சுமார் 4,500 கியாஸ் டேங்கர் லாரிகள் இந்தியா முழுவதும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாசை சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், புதிய வாடகை டெண்டரை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி அறிவித்தன. அதில் இதுவரை மண்டல அளவில் நடத்தப்பட்டு வந்த மண்டல வாரியான டெண்டர் நடைமுறை மாறி, தற்போது ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி டெண்டர் என்ற புதிய முறையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.

இந்த புதிய டெண்டர் நடைமுறை மூலம் ஒரு வாகனம் எந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளதோ, அந்த மாநிலத்தில் நடைபெறும் டெண்டரில் தான் பங்கேற்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.
எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநில அளவிலான வாடகை டெண்டர் நடைமுறையை திரும்பப்பெற வலியுறுத்தியும் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என்று நாமக்கல்லில் நடைபெற்ற தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
