சிவகங்கை,
வீடற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்படுகிறது என்று ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் வீடற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தினை அரசு சிறப்பு கவனத்துடன் செயல்படுத்தி வருகிறது. நடப்பு ஆண்டிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற பயனாளியின் ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.40000 எனவும், நகர்ப்புறங்களில் ரூ.60000 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, சிவகங்கை மற்றும் தேவகோட்டை கோட்டங்களில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்புகளை சேர்ந்த வீடற்ற பொதுமக்கள் தங்களின் முழு விவரங்களுடன் சிவகங்கை மற்றும் தேவகோட்டை ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர்களிடம் மனு அளித்து பயன்பெற பெறலாம்.
மேலும் இத்திட்டத்திற்கு அரசு நிர்ணயிக்கும் விலைக்கு நிலத்தை தர முன்வரும் நில உரிமையாளர்கள் தங்களது நிலம் தொடர்பான ஆவணங்களுடன் சிவகங்கை, தேவகோட்டை ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர்களை அணுகலாம்” என்று அவர் கூறினார்.
