மரத்தில் கார் மோதி 7 பேர் பலியான சோகம்!
கடலூர், திட்டக்குடி அருகே கார் ஒன்று மரத்தில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த 7 பேர் பலியாயினர்.
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனது குடும்பத்தினருடன் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடைபெறும் உறவினர் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.
பிரகாஷ் குடும்பத்தினர் சென்னையில் இருந்து வாடகைக் காரில் பயணம் செய்தனர். இவர்கள் சென்ற காரை சென்னையைச் சேர்ந்த சிவா என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்றுள்ளார். இவர்கள் சென்ற கார், அதிகாலை 2 மணி அளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கடலூர், திட்டக்குடி அருகே எழுதூர் என்ற இடத்தில் சென்றபோது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாகச் சென்றுள்ளது.
அப்போது சாலையோர புளியமரம் ஒன்றின் மீது பயங்கரமாக மோதி கார் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் பிரதீப், பிரகாஷ், அவரது மனைவி பிரியா, ஜோசப், குட்டி உட்பட 7பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பிரதீபின் சகோதரி பிரீத்தி (28) பெரம்பலூர் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.