இலங்கைக்கு கஞ்சா கடத்திய நால்வர் கைது...மதிப்பு ரூ.20 இலட்சம்...
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் மூன்று கார்களில் ரூ.20 இலட்சம் மதிப்புள்ள கஞ்சாவை இலங்கைக்கு கடத்திய நால்வரை காவலாளர்கள் கைது செய்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே வேதாளை கிராமத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்பட உள்ளது என்ற தகவல் கியூ பிரிவு காவலாளர்களுக்கு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து காவலாளர்கள் அந்தப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த கிராமத்தில் இருந்து வெளியே வந்த மூன்று கார்களை மடக்கி சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் அந்த மூன்று கார்களிலும் சுமார் 140 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும், அதனை இலங்கைக்கு கொண்டுச் செல்வதும் தெரியவந்தது. இதனையடுத்து கிடைத்த தகவலின்படி, இலங்கைக்கு கஞ்சா கடத்துவது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து காவலாளர்கள் காரில் இருந்த இராமேசுவரத்தை சேர்ந்த விஸ்வநாதன் (47), கோபுரத்தான் (27), ஜெகதாபட்டினம் புதுக்கோட்டையை சேர்ந்த கலந்தர்கனி (28), மதுரையை சேர்ந்த சேகர் (58) ஆகிய நால்வரையும் அதிரடியாக கைது செய்து வழக்குப்பதிந்தனர்.
இவர்களிடம் இருந்து ரூ.20 இலட்சம் மதிப்புள்ள கஞ்சாவும், அவர்கள் வந்த மூன்று கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.