தங்க காசுகள் தருவதாக கூறி ரூ.40 இலட்சம் மோசடி செய்த நால்வர் கைது... சினிமா பாணியில் திருட்டு...
விழுப்புரம்
இரண்டு கிலோ தங்க காசுகள் தருவதாக கூரி சென்னையைச் சேர்ந்த இருவரிடம் ரூ.40 இலட்சத்தை சினிமா பாணியில் திருடிய நால்வரை காவலாளர்கள் கைது செய்தனர்.
சென்னை வளசரவாக்கத் தைச்சேர்ந்த பிரபு (34), ஜானகி ராமன் (35) ஆகியோர் சென்னை ஓ.எம்.ஆர். சாலை கந்தன்சாவடியில் தனித்தனியாக செல்போன் கடை நடத்தி வருகின்றனர்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இவர்களை ஒரு கும்பல் அணுகி, வீடு கட்ட கடைக்கால் தோண்டியபோது புதையலாக கிடைத்த தங்க காசுகள் எங்களிடம் உள்ளது, அதனை குறைத்த விலைக்கு தருகிறோம் என்று கூறியுள்ளனர்.
பின்னர், அந்த தங்க காசுகளில் சிலவற்றையும் காண்பித்துள்ளனர். அதனை பார்த்து மயங்கிய பிரபுவிடமும், ஜானகி ராமனிடமும் நைசாக பேசி தங்களிடம் 2 கிலோவுக்கு மேல் தங்க காசு உள்ளது. அதனை ரூ.40 இலட்சத்துக்கு தருகிறோம் என்றும் கூறினார்கள்.
அதன்பேரில் தங்ககாசுகளை வாங்குவதற்காக ஜானகி ராமனும், பிரபுவும் 40 இலட்சம் ரூபாயுடன் மையிலத்துக்கு வந்தனர். அவர்களிடம் அந்த கும்பல் தங்க காசுகள் நிறைந்த சொம்பு குடுவையை காட்டி ஏமாற்றி 40 இலட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு பணத்தை எண்ணி சரிபார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஒரு காரில் காவலர்கள் போல வேடமிட்டு வந்த ஒரு கும்பல் ஜானகிராமன், பிரபுவிடம் என்ன இங்கு கஞ்சா விற்கிறீர்களா? என்று மிரட்டி தங்ககாசு குடுவை மற்றும் ரூ.40 இலட்சம் பணத்தை பறித்துக்கொண்டு தங்ககாசு விற்றவர்களையும் காரில் ஏற்றிக்கொண்டு தலைமறைவாகினர்.
இந்த மோசடி சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி திண்டிவனம் துணை காவல் கண்காணிப்பாளர் திருமால் மேற்பார்வையில் மையிலம் காவல் ஆய்வாளர் பால்சுதர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தார்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மோசடி கும்பலைச் சேர்ந்த செந்தில் என்ற சுரேஷ், ரகுராமன் ஆகியோரை கடந்த 2-ஆம் தேதி காவலாளர்கள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.31 ஆயிரம் மற்றும் கார் ஆகியவற்றை கைப்பற்றினர்.
இதன்பிறகு இந்த மோசடி கும்பலின் தலைவனான கண்டமங்கலம் அம்மணங்குப்பத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் (64) என்பவரை கைது செய்து 2 இலட்சத்து 22 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.
நேற்று அவரது தம்பி ராமகிருஷ்ணன் (60) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த குணசேகரன் என்பவரது மகன் அருள்முருகன் (35), அவரது தம்பி மணிகண்டன் (33) ஆகியோரை கைது செய்து ரூ.22 இலட்சத்து 98 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
அம்மணங்குப்பத்தைச் சேர்ந்த இந்த மோசடி கும்பல் மீது புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டத் தில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. இந்த கும்பலிடம் இருந்து இதுவரை 2 கார்கள் மற்றும் 25 இலட்சத்து 51 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் காவலர் போல் வேடமிட்டு காரில் வந்த ஐந்து நபர்கள் வேலூர், காஞ்சீபுரம், திருவண்ணா மலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல் கண்காண்னிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.