இந்திய காடுகளில் நாற்பதாயிரம் புலிகள்: புல்லரிக்க வைக்கும் ‘புலி’களின் புள்ளிவிபரங்கள்.
நினைத்துப் பார்க்கவே சிலிர்ப்பாக இருக்கிறது. 1910-ம் ஆண்டில் இந்தியாவில் சுமார் நாற்பதாயிரம் புலிகள் இருந்ததாம்! ஆனால் ஆங்கிலேயர்கள் மற்றும் இந்திய மன்னர்களின் வேட்டைகளால் மளமளவென சரிந்ததாம் வேங்கைகளின் எண்ணிக்கை. மிக சரியாக அறுபது ஆண்டுகாலம் கழித்து நாட்டிலிருந்த மொத்த புலிகளின் எண்ணிக்கை வெறும் ஆயிரத்து எண்ணூறு தான்.
இந்நிலையில் அதன் பிறகு புலிகளை காப்பாற்ற இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும், தற்போது புலிகள் கணக்கெடுப்பில் உருவாகியுள்ள நவீனங்களும் பற்றி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக இயக்குநர் வெங்கடேஷ் பட்டியலிட்ட தகவல்களாவன...
* 1970 களில் பிரதமராக இருந்த இந்திராகாந்தி 73-ல் புலிகள் பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்தினார்.
* புலிகளை பாதுகாப்பதன் மூலம் மற்ற உயிரினங்களையும் காத்து, ஆரோக்கியமான வன சுற்றுச்சூழலை ஏற்படுத்த முடியும்.
* ஆகவே இந்தியா முழுவதும் தற்போது 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன.
* இதில் தமிழகத்தில் மட்டும் 4 காப்பகங்கள் உள்ளன.
* முன்பெல்லாம் புலிகள் கணக்கெடுப்பானது கால்தட அச்சுக்கள் மூலம் கண்டறியப்பட்டது. ஆனால் இதன் மூலம் சரியான வகையில் கணக்கிட முடிவதில்லை.
* இப்போதெல்லாம் அறிவியல்பூர்வமான புலிகள் கணக்கெடுப்பானது தானியங்கி கேமெராக்கள் மூலம் நடத்தப்படுகிறது.
* புலிகள் கணக்கெடுப்பானது 4 நிலைகளாக செயல்படுத்தப்படுகிறது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் மட்டும் 50 பீட்டுகள் உள்ளன. ஒவ்வொரு பீட்டுக்கும் வனத்துறையை சேர்ந்த 3 பேர், தன்னார்வலர்கள் 3 பேர் என மொத்தம் ஆறு பேர் இணைந்து கணக்கெடுப்பை மேற்கொள்வார்கள்.
* ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு செல்போன் வழக்கப்படும். அதில் ஜி.பி.ஆர்.எஸ். செயலி வசதியுண்டு. இதை வைத்து வன விலங்குகளின் காலடி தடம், எச்சம், திரவ அடையாளம், ஆகியவை துல்லியமாக பதிவிட முடியும்.
...என பெருமையுடன் பகிர்ந்திருக்கிறார்.
வளரட்டும் புலிகளின் எண்ணிக்கை!