மீன்களில் புற்றுநோய் உண்டாக்கும் ஃபார்மலின் வேதிப்பொருள் கலப்பு... பகீர் தகவல்!
சென்னையில் விற்கப்படும மீன்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் ஃபார்மலின் வேதிப்பொருள் கலந்து விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையின் மிக முக்கிய மீன் விற்பனை சந்தைகளான சிந்தாதரிப்பேட்டை, காசிமேட்டில் வாங்கப்ட்பட மீன்கள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் சுறா, ஏரி வவ்வால், ஒட்டுக்கனவா, பேய்க்கனவா போன்ற மீன் வகைகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது ஃபார்மலின் ரசாயனம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீன்களை ஏற்றுமதி செய்புவர்களே இதுபோன்ற செய்வதாகவும், உண்மையான மீனவர்கள் ரசாயனம் கலப்பதில்லை என்றும் சென்னை மீனவர்கள் கூறுகின்றனர். ஃபார்மலின் தெளிக்கப்பட்டுள்ள மீன்களை மனிதர்கள் உண்பதால் புற்றுநோய் உண்டாகிறது. ஃபார்மலின் வேதிப்பொருள், இறந்துபோனவர்களின் உடல்களை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் நச்சுத்தன்மை கொண்ட ரசாயனமாகும்.
கேரளாவில் கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனைகளில் ஃபார்மலின் கொண்டு பதப்படுத்தப்பட்ட 12,000 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கேரள மாநில சுகாதார துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவின் உத்தரவின்பேரில சாகர் ராணி என்ற பெயரில மாநில உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது பாலக்காடு, வாளையாறு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ஃபார்மலின் ரசாயனம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையின் மிக பெரிய மீன் மார்க்கெட்டான சிந்தாதரிப்பேட்டை மற்றும் காசிமேட்டில் வாங்கப்பட்ட 30 மீன்கள் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டன. அப்போது 11 மீன் மாதிரிகளில் ஃபார்மலின் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மீன்களில் ஃபார்மலின் இருப்பதை உறுதிபடுத்திய கேரள அரசு, தமிழக மீன்களுக்கு கடந்த வாரம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மீன்களில் வேதிப்பொருள் தெளிப்பதாக வந்த தகவலை அடுத்து எப்போதும் திருவிழாபோல காணப்படும் சிந்தாதரிப்பேட்டை, காசிமேடு மீன் மார்ட்கெட்டுகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் மீன் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.