நம்ம ஊரு கோயிலை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோரிக்கை...
இராமநாதபுரம்
"உலகிலேயே மிக நீளமான பிரகாரம்" என்ற பெருமையை பெற்றுள்ள இராமேசுவரம் கோயிலின் 3-ஆம் பிரகாரத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உலகளவில் மிக நீளமான பிரகாரமாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலின் 3-ம் பிரகாரத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க அரசுக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் கோயில் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு உலகளவில் பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம் அமைந்துள்ளது. அந்த பிரகாரத்தில் ஒரே மாதிரியான 1212 தூண்கள் உள்ளது. இது இந்தக் கோயிலின் சிறப்பம்சம்.
இந்தப் பிரகாரத்தின் வெளிப்புறநீளம் கிழக்கு மேற்காக 690 அடியும், தெற்கு வடக்காக 435 அடியும் உள்ளது. உள்புற நீளம் கிழக்கு மேற்காக 649 அடியும், தெற்கு வடக்காக 395 அடியும் உள்ளது. உயரம் 22 அடி 7 அங்குலமும் உள்ளது.
இந்த பிரகாரம் முத்துராமலிங்க சேதுபதியால் 1740 - 1770-ஆம் ஆண்டுகளுக்கு இடையே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு வசதியும் இல்லாத காலக்கட்டத்தில் கட்டிடக்கலை நுணுக்கத்துடன் ஒரே மாதிரியாக தூண்கள் செதுக்கப்பட்டு நான்கு புறமும் ஒரே மாதிரியான வடிவில் அமைந்துள்ள பிரகாரம் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கிறது.
தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புகழ்பெற்ற இந்த 3-ஆம் பிரகாரத்தை மிகுந்த ஆர்வமுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
இந்த நிலையில், "உலகிலேயே மிக நீளமான பிரகாரம்" என்ற பெருமையை பெற்றுள்ள இராமேசுவரம் கோயிலின் 3-ஆம் பிரகாரத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படும் பட்சத்தில் கோயிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.