பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம்...! மனமுடைந்த மாணவி தற்கொலை முயற்சி!
கட்டாய திருமண செய்து வைத்ததால் மனமுடைந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ராசிபுரத்தில் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த வாணகாரன்புதூரைச் சேர்ந்தவர் வீர குமார். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், மாணவி படித்துக் கொண்டிருந்த போதே அவரது பெற்றோர், கபிலர் மலை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பிரமணி (30) என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த திருமணம் கடந்த 3 வாரங்களுக்கு முன்பாக நடத்தப்பட்டுள்ளது.
படித்துக் கொண்டிருந்தபோதே திருமணம் செய்து வைத்ததால் மனமுடைந்த நிலையில் வீரகுமாரின் மகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீரகுமாரின் மகள் இன்று திடீரென விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மாணவி விஷமருந்தியதைப் பார்த்த அருகில் இருந்தோர், அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் பெற்றோர் மற்றும் சுப்பிரமணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.