சுடச் சுட கண்முன்னே தயாராகும் விதவிதமான அரிவாள்,
விராலிமலை,
மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் விராலிமலை பகுதியில் தங்கி, விதவிதமான அரிவாள், கோடாரிகளை நம் கண் முன்னே தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
விராலிமலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது தங்களது நிலத்தை உழுது, நெல் பயிரை சாகுபடி செய்து விவசாய பணிகளை மும்முரமாக செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சிலர் குடும்பத்துடன் வந்து விராலிமலையில் தங்கி இருந்து விவசாயிகளுக்கு பயன்படும் அரிவாள், கோடாரி, அறுவடைக்கு பயன்படுத்தும் அரிவாள் போன்ற இரும்பு பொருட்களை நம் கண்முன்னே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்கள் சாலையின் ஓரத்தில் சிறிய அளவில் பட்டறை அமைத்து நெற்கதிர் அறுக்கும் அரிவாள், மரம் வெட்ட பயன்படும் அரிவாள், கோடாரி, ஆடுகள் வெட்ட பயன்படும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த தொழிலில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண்களும் ஈடுபட்டு உள்ளதால், விராலிமலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆச்சரியத்துடன் பார்த்து, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி பயனடைகின்றனர்.