தீபாவளி பட்டாசு புகையால் திணறிய சென்னை மாநகரம்….. சிக்கித் தவித்த நோயாளிகளும், வாகன ஓட்டிகளும் !!!
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் மாநகரம் முழுவதும் கடும் புகை மூட்டம் நிலவியது. இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
நாடு முழுவதும் நேற்று தீபாவளிப் பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில் ஏராளமானோர் பட்டாசுகள் வெடித்தனர். இதனால் சென்னை நகரம் முழுவதும் கடும் புகை மூட்டம் நிலவியது. பட்டாசு வெடித்ததன் காணமாக , சென்னையில் காற்று மாசு பெருமளவு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
அதிக அளவில் பட்டாசு வெடிக்கப்பட்டதால், காற்று மாசுபாடு அனுமதிக்கப்பட்ட அளவை விட ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
ஒரு கனமீட்டருக்கு 100 மைக்ரான் என்பதே அனுமதிக்கப்பட்ட காற்றுமாசுபாட்டின் அளவாகும் என்றும் ஆனால், இன்று இது 263 என்ற அளவில் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இரவு 10 மணி வரை பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் சென்னை முழுவதும் புகைமூட்டம் காணப்படுகிறது. இதனால் மக்கள் சுவாசிப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சாலைகளிலும் புகைமூட்டம் நிலவுவதால் வாகனஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
சென்னை கே.கே.நகர், ராயப்பேட்டை மற்றும் ஏராளமான தனியார் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் இந்த புகை மூட்டத்ல் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
குழந்தைகள், முதியவர்கள் போன்றோருக்கு பட்டாசு புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மேலும் நோயாளிகள் அனைவரும் பாதிக்கப்பட்டனர்.
இதே போன்று சென்னை முழுவதும் கடும் புகை மூட்டம் நிலவியதால் அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் மின்சார ரயில்களின் வேகத்தை குறைக்க ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.