ராயபுரத்தில் பூமிக்குள் கிளம்பிய திடீர் புகையால் பீதி- பொதுமக்கள் ஓட்டம்!!
சென்னை கல்மண்டபம் பகுதியில் தார்ச்சாலையை பிளந்து கொண்டு திடீரென கரும்புகை வந்தது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, எண்ணூர் உள்பட வடசென்னை பகுதியில் இருந்து பாரிமுனை, சென்ட்ரல், பிராட்வே ஆகிய பகுதிகளுக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் பள்ளி, கல்லூரி, வேலை, வியாபாரம் என பல்வேறு பணிகளுக்காக சென்று தினமும் எஸ்என் செட்டி தெரு வழியாக வருகின்றனர்.
இதனால், இந்த பகுதி எந்நேரமும் பரபரப்புடன் காணப்படும். மேலும், குட்டி தி.நகர் எனப்படும் எம்சி ரோடு அருகில் இருப்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்து துணி வியாபாரிகள், இங்கு வந்து மொத்தமாக வாங்கி செல்வார்கள். இதனால், மக்கள் கூட்டமும் அதிகரித்து காணப்படும்.
எஸ்என் செட்டி தெருவில் இருந்து ஜிஏ ரோடு - எம்சி ரோடு சந்திப்பின் எதிரில் தொலைபேசி இணைப்பகம் உள்ளது. இதன் எதிரில் உள்ள சிறுநீர் கழிப்பிடத்தின் அருகில், திடீரென இன்று காலை சுமார் 7 மணியளவில் தார்ச்சாலையில் இருந்து கரும்புகை வந்தது.
இதை பார்த்ததும், அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில் புகை அதிகமாகி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
இதையடுத்து, அங்கு வந்த சமூக ஆர்வலர் ஒருவர், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இந்த பகுதியில் போக்குவரத்தை சிறிது நேரம் நிறுத்தி, சம்பந்தப்பட்ட துறையினரை வரவழைத்து, புகை வந்ததற்கான காரணத்தை அறியும்படி கூறினார்.
இதைதொடர்ந்து, போலீசார் அங்கு சென்று, வாகன போக்குவரத்தை சிறிது நேரம் நிறுத்தி வைத்தனர். ஆனால், இதுவரை பூமியை பிளந்து வந்த கரும்புகைக்கான காரணம் தெரியவில்லை.