Flush with the gold chain of a woman who had traveled by train
சப்தகிரி விரைவு ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் மர்ம நபர்கள் தங்க சங்கிலி பறித்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், ரயில்வே போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
அண்மை காலமாக சென்னை மின்சார ரயில்களில் கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் சுற்றித் திரியும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. கல்லூரி மாணவர்களுக்குள் ஏற்படும் மோதல், பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் அவர்களின் நடவடிக்கை இருந்து வருகிறது. இதனால், ரயில் பயணிகள் ஒருவித பயத்துடனே பயணம் செய்து வருகின்றனர்.
ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதும், அவர்களிடம் இருந்து நகைகள் பறிப்பதும் அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பெண் ஒருவரிடம் இருந்து தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பேசின்பிரிட்ஜ் அருகே நடந்துள்ளது.
சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் மலர்விழி (42). இவர், கணவர் சேதுமாதவனுடன், பேத்தியின் காதணி விழாவுக்காக திருப்பதிக்கு சென்றுள்ளனர். சப்தகிரி விரைவு ரயிலில் இவர்கள் பயணம் செய்தனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில், பேசின்பிரிட் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள், ஜன்னல் ஓரம் பயணம் செய்து கொண்டிருந்த மலர்விழி அணிந்திருந்த 6 சவரன் தங்க சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர். அப்போது, ரயில் மித வேகமாக சென்று கொண்டிருந்து. இது கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
பதறிய மலர்விழி, திருவள்ளூர் ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீஸ் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
