காஞ்சிபுரத்தில் விட்டு விட்டு பெய்யும் கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் விட்டு விட்டு பெய்யும் கனமழையால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.
தென் வங்கக் கடலில் 'ஒக்கி' புயல் மையம் கொண்டுள்ளதால் வட, தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று காலை முதல் திருப்போரூர், கேளம்பாக்கம், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகள் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாக மழை பெய்யத் தொடங்கியது.
இதில், காஞ்சிபுரத்தில் விட்டு விட்டு கனமழை பெய்ததால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.
அதுபோல், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்ட நிர்வாகம் மீட்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் மழையளவு:
திருப்போரூர், செங்கல்பட்டில் தலா 29 மில்லி மீட்டர், காஞ்சிபுரம் 28 மில்லி மீட்டர், திருக்கழுகுன்றம் 13 மில்லி மீட்டர், செய்யூர் 11 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
உத்தரமேரூர், மதுராந்தகம், ஆலந்தூர், மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் 6-8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.