PM Modi visit Chennai 26:மே.26 சென்னை வருகிறார் பிரதமர் மோடி... 5 அடுக்கு பாதுகாப்பு... போக்குவரத்து மாற்றம்!!
பிரதமர் மோடி சென்னை வரவுள்ளதை அடுத்து சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட உள்ளது.
பிரதமர் மோடி சென்னை வரவுள்ளதை அடுத்து சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மே.26ம் தேதி சென்னை வருகிறார். அதைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மேலும் ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். முன்னதாக, மே 26 ஆம் தேதி காலை, கச்சிபௌலியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸின் ஆண்டு தின விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி ஹைதராபாத் செல்கிறார். அதை முடித்துக்கொண்டு ஐதராபாத்தில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் சென்னை வரும் அவருக்கு, விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்க உள்ளனர். பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகர் முழுவதும், 10 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரு அரங்கத்திற்கு சாலை மார்க்கமாக காரில் செல்ல பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி 30 நிமிடங்களுக்கு மேல் காரில் பயணம் செய்து மாலை 5.45 மணி அளவில் மோடி நேரு ஸ்டேடியத்துக்கு வருகை தரவுள்ளார்.
ஆகையால் பிரதமர் பயணிக்கவுள்ள சாலைகள் முழுவதும் நாளை இரவிலிருந்தே காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்வர உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னரே சென்னை வந்துவிட்ட மத்திய பாதுகாப்பு அதிகாரிகள், பிரதமரின் பாதுகாப்பு குறித்த கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமரின் வருகையையொட்டி, நேரு ஸ்டேடியத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும், அவர் பயணம் செய்யும் வழிகளிலும் 5 அடுக்கு பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்காக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. பின்னர் 7 மணிக்கு விழாவை முடித்துக் கொண்டு, 7.30 மணியளவில் சென்னை விமான நிலையம் சென்றடையும் பிரதமர் மோடி, அங்கிருந்து விமானப்படை விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.